திண்டுக்கல் மாநகராட்சியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி

திண்டுக்கல் மாநகராட்சியில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டுவிட்டது என்று கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.
திண்டுக்கல்:
கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் 100 சதவீத இலக்கை அடைவதற்காக மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்படுகின்றன.
இதில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடந்த பல வாரங்களாக நடத்தப்பட்ட மெகா முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.
இதன் பலனாக திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 100.01 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 2 லட்சத்து 19 ஆயிரத்து 902 ஆகும்.
இதில் 18 வயதுக்கு மேல் 1 லட்சத்து 69 ஆயிரத்து 329 பேர் உள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் முதல் தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 69 ஆயிரத்து 432 பேர் செலுத்தியுள்ளனர்.
2-ம் தவணை தடுப்பூசி
2-வது தவணை கொரோனா தடுப்பூசியை 1 லட்சத்து 30 ஆயிரத்து 888 பேர் செலுத்தியுள்ளனர். இது 77.3 சதவீதம் ஆகும். திண்டுக்கல் நகர் பகுதிக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் தொழில், வேலைக்காக வருகை தருகின்றனர்.
அவர்கள் திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்தவர்களாக இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே மாநகராட்சி பகுதியில் 100 சதவீத இலக்கையும் தாண்டி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.
100 சதவீத இலக்கை அடைந்திருந்தாலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் யாரேனும் உள்ளனரா? என்று மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 18 வயதுக்கு மேல் 17 லட்சத்து 30 ஆயிரத்து 600 பேர் உள்ளனர். இதில் 16 லட்சத்து 1,174 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 92.5 சதவீதம் ஆகும். 10 லட்சத்து 11 ஆயிரத்து 85 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story