செல்போன் செயலி மூலம் புலிகளை கணக்கெடுக்க பயிற்சி

களக்காடு-முண்டந்துறையில் செல்போன் செயலி மூலம் புலிகளை கணக்கெடுப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விக்கிமசிங்கபுரம்:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் புலிகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் புலிகள் கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டில் இருந்து காகிதத்துக்கு பதிலாக செல்போன் செயலி மூலமாக புலிகள் கணக்கெடுக்கப்பட உள்ளன.
செல்போன் செயலி மூலம் புலிகளை கணக்கெடுப்பது குறித்து வனத்துறையினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியா தலைமை தாங்கினார். செல்போன் செயலி மூலம் புலிகளை கணக்கெடுப்பது குறித்து பயிற்சியாளர் லோகேஷ் காணொலியில் பயிற்சி அளித்தார். புலிகள் கணக்கெடுப்பிற்காக வனத்துறையினர் 29 பேருக்கு செல்போன்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், செல்போன் செயலி மூலம் புலிகளை கணக்கெடுப்பதுடன் வனவிலங்குகளின் நடமாட்டம், எச்சம், அடையாளங்கள் போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும். தினமும் வனப்பகுதியில் சுற்றித்திரியும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்த தகவல்களையும் கண்காணிக்க முடியும் என்று தெரிவித்தனர்.
பயிற்சியில் வனச்சரகர்கள் கார்திகேயன் (அம்பை), சரவணகுமார் (முண்டந்துறை), பாரத் (பாபநாசம்), வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story