தேன்கனிக்கோட்டை அருகே யானை மிதித்து விவசாயி சாவு

தேன்கனிக்கோட்டை அருகே யானை மிதித்து விவசாயி பலியானார்.
தேன்கனிக்கோட்டை:
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கண்டகானப்பள்ளி தின்னூரை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன். இவருடைய மகன் எல்லப்பா (வயது 35). விவசாயி. இவருக்கு திருமணமாகி ரேணுகா (21) என்ற மனைவியும், 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
எல்லப்பா முள்பிளாட் காப்புக்காட்டில் கால்நடைகளை மேய்க்க செல்வது வழக்கம். அதன்படி நேற்று அவர் தனது கால்நடைகளை காப்புக்காட்டில் மேய்த்து கொண்டிருந்தார்.
யானை மிதித்து பலி
அப்போது அங்கு சுற்றித்திரிந்த ஒற்றை யானை எல்லப்பாவை விரட்டியது. அவர் தப்பி ஓடியபோது, தொடர்ந்து துரத்தி சென்ற யானை அவரை தாக்கியது. பின்னர் கால்களால் மிதித்து எல்லப்பாவை கொன்றது.
இதுகுறித்த தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று எல்லப்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேன்கனிக்கோட்டை அருகே யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story