கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய திபுவிடம் கோவை போலீசார் 4 மணி நேரம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய திபுவிடம் கோவை போலீசார் 4 மணி நேரம் விசாரணை
கோவை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய திபுவிடம் கோவையில் போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு காவலாளியை கொலை செய்து, பங்களாவில் உள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் வாளையார் மனோஜ், சயான் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது, இவர்களிடம் தனிப்படை போலீசார் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து சாட்சிகள் மற்றும் அரசு தரப்பு சாட்சிகள் என தற்போது வரை 150 நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் வழக்கில் கூடுதல் விசாரணைக்காக குற்றவாளிகளான திபு, ஜித்த்தின் ஜாய், உதயகுமார் ஆகிய 3 பேரையும் கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் விசாரணைக்காக ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.
திபுவிடம் விசாரணை
இந்த நிலையில் நேற்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கூடுதல் விசாரணைக்காக வழக்கில் தொடர்புடைய திபு நேரில் ஆஜரானார். அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் மற்றும் தனிப்படை போலீசார் 4 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த அன்று எதற்காக கார்களில் வந்தனர். பின்னர் நீலகிரி மாவட்டம் கூடலூர் போலீசாரின் வாகன தணிக்கையில் இரவு நேரம் சிக்கியது எப்படி? தொடர்ந்து யார் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் அவர்களை விடுவித்தனர்.
மேலும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. மற்ற இருவரும் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேரில் ஆஜராகி தங்களது விளக்கங்களை அளிக்க உள்ளனர்.
Related Tags :
Next Story