3,700 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன; கலெக்டர் தகவல்

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 3,700 வசதிகள் உள்ளன என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கூறினார்.
ராணிப்பேட்டை
கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் நோய் தோற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கூறுகையில்,
ஒமைக்ரான் வைரஸ் அதி வேகமாக பரவக்கூடிய தொற்றாக உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.
வணிக நிறுவனங்கள் முக கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது. குளிர் சாதனங்களை உபயோகிக்கக் கூடாது. உணவகங்களில் 50 சதவீத நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது. பொதுமக்கள் தங்களது பயணங்களை தவிர்க்க வேண்டும்.
கோவிட் உறுதியான நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக மருத்துவமனைகள், மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட நபர்களில் 10 சதவீதத்திற்கும் மேல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் வேலைக்குச் செல்பவர்கள் வீட்டில் இருந்தே தங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்துச் செல்ல வேண்டும். உணவகங்களில் கூட்டம் கூடி சாப்பிடுவதால் தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளது.
முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்.
மாவட்டம் முழுவதிலும் 3,700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. பாதிப்பிற்கு தகுந்தபடி வீட்டில் வைப்பதா அல்லது மையங்களில் வைப்பதா என முடிவெடுக்கப்படும். இரவு நேரம் முழு ஊரடங்கு பின்பற்றப்படும்.
மாவட்டத்தில் ஒமைக்ரான் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கோவிட் தொற்று தான் உறுதியாகி உள்ளது.
மாவட்டத்தில் 70 சதவீதம் மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். மீதமுள்ள 30 சதவீதம் மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story