சிறுமியை காப்பாற்றிய நர்சிங் மாணவி குளத்தில் மூழ்கி பலி

வளநாடு அருகே நீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றி விட்டு நர்சிங் மாணவி உயிரை விட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
துவரங்குறிச்சி
திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த ஸ்ரீரங்கம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் போதும்பொண்ணு (வயது 19). 12-ம் வகுப்பு முடித்த இவர், தற்போது பி.எஸ்சி. நர்சிங் சேர்ந்துள்ளார். நேற்று அந்த பகுதியில் உள்ள குளத்தில் தன்னுடைய தோழிகளுடன் போதும்பொண்ணு குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அதே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 13 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கியதை கண்ட போதும்பொண்ணு உடனே அந்த சிறுமியை காப்பாற்ற முயன்றார். அப்போது நீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றி வெளியே தள்ளிய போதும்பொண்ணு தான் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கினார். உடனே, தோழிகள் கூக்குரலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து நீரில் மூழ்கிய போதும்பொண்ணை மீட்டு வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அப்பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த வளநாடு போலீசார் போதும்பொண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியை காப்பாற்றி விட்டு தன்னுயிரை நீத்த நர்சிங் மாணவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story