திருக்கோவிலூர் அருகே வாடகை பாத்திர வியாபாரி கொலை முயற்சி வழக்கில் 6 பேர் கைது

திருக்கோவிலூர் அருகே வாடகை பாத்திர வியாபாரி கொலை முயற்சி வழக்கில் 6 பேர் கைது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் விஜயகுமார்(வயது 30). அதே ஊரில் சவுண்டு சர்வீஸ் மற்றும் வாடகை பாத்திர கடை நடத்தி வரும் இவர் சம்பவத்தன்று நாயனூர் ரெயில்வே பாதையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது அவரை அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த அன்பு என்கிற விஜய்(22), இவரது நண்பர் வெங்கடேசன் உள்ளிட்ட 5 பேர் கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
முன்விரோதம் காரணமாக நடந்த இந்த சம்பவம் குறித்து அரகண்ட நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் 9 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முதல் கட்டமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய பழனி, அஞ்சலை, சுருளி மற்றும் தேவிகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அன்பு என்கிற விஜய் மற்றும் வெங்கடேசன் ஆகியோரை மாயனூர் ரெயில்வே பாதையில் சுற்றி திரிந்தபோது அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைதுசெய்தனர். இவர்களிடம் இருந்து 6 கத்திகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அய்யப்பன், காடகனூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித் மற்றும் அசோகன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story