சசிகலா, இளவரசி மார்ச் 11-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் - பெங்களூரு கோர்ட்டு உத்தரவு

சிறையில் சொகுசு வசதி பெறுவதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா, இளவரசி மார்ச் மாதம் 11-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி பெங்களூரு கோர்ட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெங்களூரு:
ரூ.2 கோடி லஞ்சம்
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். தற்போது அவர்கள் 3 பேரும் விடுதலையாகி விட்டனர். இதற்கிடையில், சிறைவாசம் அனுபவித்தபோது சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க பரப்பனஅக்ரஹாரா சிறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விசாரணையை நடத்தாமலும், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமலும் போலீசார் தாமதம் செய்து வருவதால், இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னையை சேர்ந்த கீதா என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, விசாரணையை விரைந்து முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இதையடுத்து, கடந்த மாதம்(ஜனவரி) 7-ந் தேதி பெங்களூரு 24-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஊழல் தடுப்பு படை போலீசார், ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார்கள். அதே நேரத்தில், சென்னையை சேர்ந்த கீதா தொடர்ந்த பொதுநல வழக்கின் விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் கடந்த வாரம் நடந்த போது, ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதை ஊழல் தடுப்பு படை போலீசார் உறுதி செய்திருந்தனர்.
அதே நேரத்தில் பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக இருந்த சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த அரசு அனுமதி வழங்கி இருப்பதாகவும், அவர்கள் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் ஊழல் தடுப்பு படை போலீஸ் தரப்பில் ஆஜராகி இருந்த வக்கீல் கர்நாடக ஐகோர்ட்டில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அந்த பொதுநல வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
சசிகலாவுக்கு சம்மன்
இந்த நிலையில், ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் குற்றவாளிகளாக சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா, இளவரசி உள்பட 7 பேர் சேர்க்கப்பட்டு இருந்தார்கள். கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணை நிறைவு பெற்றிருந்ததால், பெங்களூரு 24-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்னிலையில் ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்னிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் அடுத்த மாதம்(மார்ச்) 11-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும், இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 11-ந் தேதிக்கு அவர் ஒத்திவைத்துள்ளார். இதையடுத்து, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு சம்மன் வழங்கப்பட இருக்கிறது.
இடைக்கால தடை
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் அனிதா, தன் மீது விசாரணை நடத்த கர்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, டாக்டர் அனிதாவிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்திருந்தது.
இதனால் டாக்டர் அனிதாவை தவிர சசிகலா உள்ளிட்ட 6 பேருக்கும் கோர்ட்டு உத்தரவின் பேரில் சம்மன் வழங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story