நீதிமன்ற ஊழியர் தற்கொலை முயற்சி

குளித்தலையில் ரெயில்வே தண்டவாளத்தில் படுத்து நீதிமன்ற ஊழியர் தற்கொலைக்கு முயன்றது குறித்து கரூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை
தற்கொலை முயற்சி
பாலக்காட்டில் இருந்து குளித்தலை வழியாக திருச்சி நோக்கி நேற்று பிற்பகல் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. குளித்தலை- மணப்பாறை சாலையில் உள்ள ரெயில்வே கேட்டை ரெயில் கடக்க முயன்றபோது, அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஒருவர் படுத்து இருப்பதை ரெயில் எஞ்ஜின் டிரைவர் பார்த்துள்ளார். உடனே டிரைவர் சத்தமாக ஒலி எழுப்பியவாறு ரெயிலின் வேகத்தை குறைத்துள்ளார்.
இருப்பினும் ரெயில்வே தண்டவாளத்தில் படுத்து இருந்த அந்த நபர் மீது ரெயில் மோதியது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் ரெயிலில் அடிபட்ட நபரை ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் மற்றும் கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார் ரெயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபர் சட்டை பையில் இருந்த முகவரியை வைத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில் ரெயிலில் அடிபட்ட நபர் குளித்தலை அருகே உள்ள மனத்தடை பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் பிரசன்னா (வயது 30) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டெனோகிராப்பராக பணியில் சேர்ந்து உள்ளதாகவும், ஒரு மாத மருத்துவ விடுப்பில் இவர் தனது வீட்டிற்கு வந்ததாக தெரியவந்துள்ளது. இதன் பின்னர் ரெயிலில் அடிபட்ட அவரின் உறவினர்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக பிரசன்னாவை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எதற்காக அவர் தற்கொலைக்கு முயன்றார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story