பொதுமக்கள் சாலை மறியல்

குடவாசல் அருகே வாகனம் மோதி மளிகை கடை உரிமையாளர் பலியானார். இதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியலி்ல் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடவாசல்:
குடவாசல் அருகே வாகனம் மோதி மளிகை கடை உரிமையாளர் பலியானார். இதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியலி்ல் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மளிகை கடை உரிமையாளர் பலி
குடவாசல் அருகே உள்ள கூந்தலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமையன். இவரது மகன் அய்யப்பன்(வயது45). இவர் கூந்தலூரில் மளிகைக்கடை வைத்துள்ளார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணி அளவில் கும்பகோணத்தில் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு தனது மோட்டார்சைக்களில் கீரங்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக அய்யப்பன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யப்பன் இறந்தார்.
சாலைமறியல்
இதுகுறித்து எரவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் ராமையன்
கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், டிரைவரையும் தேடி வருகிறார்கள்.
இந்தநிலையில் விபத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி பூந்தோட்டம் நாச்சியார் கோவில் சாலை கூந்தலூர் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
---
Related Tags :
Next Story