சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மீன்சுருட்டியை அடுத்துள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நந்திபெருமானுக்கு 16 வகையான வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், சின்னவளையம், பாப்பாக்குடி, மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மீன்சுருட்டியில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள நந்திபெருமானுக்கு 16 வகையான வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அரியலூரில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காசி விஸ்வநாதர் கோவில், ஆலந்துறையார் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story