பிலிக்கல்பாளையம் வெல்ல ஏல சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை 50 ஆயிரத்து 640 கிலோ உருண்டை, அச்சு வெல்லம் பறிமுதல்


பிலிக்கல்பாளையம் வெல்ல ஏல சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை 50 ஆயிரத்து 640 கிலோ உருண்டை, அச்சு வெல்லம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 March 2022 11:36 PM IST (Updated: 2 March 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் 50 ஆயிரத்து 640 கிலோ உருண்டை, அச்சு வெல்லங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பரமத்திவேலூர்:
பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் 50 ஆயிரத்து 640 கிலோ உருண்டை, அச்சு வெல்லங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரும்பு பயிர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், செங்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்படுகின்றன. இந்த பகுதிகளில் விளையும் கரும்பை வெல்ல ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். 
இவ்வாறு தயார் செய்யப்பட்ட வெல்லங்களை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம், சர்க்கரை விற்பனை ஏல சந்தைக்கு விவசாயிகள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
திடீர் சோதனை
இந்த நிலையில் வெல்லங்களில் கலப்படம் செய்யப்படுவதாக வந்த புகாரின்பேரில் நேற்று மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முருகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் செல்வகுமார் உள்ளிட்டோர் பிலிக்கல்பாளையத்தில் உள்ள விவசாயிகள் வெல்லம், சர்க்கரை விற்பனை ஏல சந்தையில் திடீர் சோதனை நடத்தினர். இதில் வெல்ல ஏல சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 42 ஆயிரத்து 740 கிலோ உருண்டை, அச்சு வெல்லங்களை சோதனை செய்தனர். 
சோதனையில் நிறம் மற்றும் அஸ்கா சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்பட்ட உருண்டை மற்றும் அச்சு வெல்லங்கள் சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 50 ஆயிரத்து 640 கிலோவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் டாக்டர் அருண் கூறியதாவது:- 
கடும் நடவடிக்கை
விவசாயிகள் வெல்லம், சர்க்கரை விற்பனையாளர் சந்தையில் உள்ள 10 வெல்லமண்டி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வெல்லங்களில் கலப்படம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
மேலும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லங்களில் அஸ்கா சர்க்கரை மற்றும் செயற்கை வண்ணங்கள் கலந்தால் உணவு மாதிரி எடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story