புதுக்கோட்டையில் 8 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

புதுக்கோட்டையில் உள்ள 8 பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை,
உள்ளாட்சி தேர்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிமளம், அன்னவாசல், கீரனூர், இலுப்பூர், கீரமங்கலம், ஆலங்குடி, கறம்பக்குடி, பொன்னமராவதி ஆகிய 8 பேரூராட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 22-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்தநிலையில் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டையில் உள்ள 8 பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அரிமளம்
அரிமளம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மாரிக்கண்ணு (வயது 40) என்பவர் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 13-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இவர் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். இவருடைய கணவர் முத்துக்குமார் (60) பி.காம் பட்டதாரியாவார். இவர் தி.மு.க. தெற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராக உள்ளார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினராகவும், அரிமளம் ஒன்றிய செயலாளர் தேர்தலில் 3 முறை போட்டியிட்டு உள்ளார். தற்போது அரிமளம் சேசு வீதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
அன்னவாசல்
அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மதினாபேகம் (56) என்பவர் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 5-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இவரது கணவர் அக்பர்அலி. இவர் அன்னவாசல் தி.மு.க. நகர செயலாளராக இருந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
கீரனூர்
கீரனூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஜெயமீரா (38) என்பவர் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.ஏ., பி.எட் பட்டதாரியான இவர் 1-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இவரது கணவர் ரவிக்குமார் 2006-11-ம் ஆண்டுகளில் தி.மு.க.வின் பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
இலுப்பூர்
இலுப்பூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு சகுந்தலா (70) என்பவர் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 14-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இவரது மகன் விஜயக்குமார் இலுப்பூர் நகர செயலாளராக இருந்து வருகிறார்.
கீரமங்கலம்
கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு சிவக்குமார் (45) என்பவர் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். விளையாட்டுத்துறையில் முதுகலை பட்டதாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளாக பேரூர் செயலாளராக உள்ளார். இவரது மனைவி கார்த்திகா கடந்த பேரூராட்சி தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
ஆலங்குடி
ஆலங்குடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு ராசி (42) என்பவர் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் 13-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இவரது கணவர் முருகானந்தம். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது கணவர் குடும்பத்தினர் இந்த வார்டில் அதிகமுறை கவுன்சிலராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கறம்பக்குடி
கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு முருகேசன் (47) என்பவர் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 8-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இவர் பி.ஏ. படித்துள்ளார். இவருடைய மனைவி சசிகலா (35). இவர்கள் கறம்பக்குடி சடையன் தெருவில் வசித்து வருகிறார்கள். கறம்பக்குடி நகர செயலாளராக முருகேசன் பதவி வகித்து வருகிறார். இவரது தந்தை மறைந்த உடையப்பன் தி.மு.க.வில் மூத்த நிர்வாகியாக இருந்தவர். கறம்பக்குடி நிலவள வங்கி தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுந்தரி அழகப்பன் (51) என்பவர் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 10-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இவர் 9-ம் வகுப்பு படித்துள்ளார். இவருடைய கணவர் அழகப்பன் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக தி.மு.க.வின் நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். தற்போது பொன்னமராவதி வலையப்பட்டியில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சுந்தரி அழகப்பனின் தந்தை அய்யாவு கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வில் கட்சி பொறுப்பிலும், ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story