சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 5 March 2022 4:57 PM GMT (Updated: 5 March 2022 4:57 PM GMT)

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கடலூர், 

சிறுமியுடன் காதல்

திட்டக்குடி அருகே உள்ள பட்டூரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் குறளரசன் (வயது 24),  இவருக்கும், திட்டக்குடியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்த 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் குறளரசன், அந்த சிறுமியிடம் அவரை காதலிப்பதாக கூறினார்.

 இதையடுத்து அவர், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்றார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், சென்னைக்கு சென்று அவரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குறளரசன் மீண்டும் அந்த சிறுமியை திருப்பூருக்கு கடத்தி சென்றார். அங்கு அவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.

கடத்தி திருமணம்

பின்னர் சிறுமியின் பெற்றோர் திருப்பூர் சென்று அங்கிருந்த குறளரசனிடம் இருந்து சிறுமியை பிரித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகும் குறளரசன், வாழ்ந்தால் சிறுமியுடன் தான் வாழ்வேன் என்று கூறி மீண்டும் சிறுமியை கடத்திக் கொண்டு திருப்பூர், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தினார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து குறளரசனை கைது செய்ததுடன், அவருடன் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடுத்தனர்.

10 ஆண்டு சிறை

இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த குறளரசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரூ.5 லட்சத்தை அரசிடமிருந்து பெற்று 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Next Story