நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா-கொடி ஏற்றத்துடன் நாளை தொடங்குகிறது


நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா-கொடி ஏற்றத்துடன் நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 9 March 2022 11:48 PM IST (Updated: 9 March 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

நாமக்கல்:
நரசிம்மசாமி கோவில்
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து, குளக்கரை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதேபோல் வருகிற 17-ந் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு சிம்மம், ஹனுமந்தம், கருடன், சேஷ, யானை வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து, குளக்கரை மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தேரோட்டம்
வருகிற 17-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதில் பக்தர்கள் இறைவனுக்கு மொய் வழங்கி, வழிபாடு செய்ய உள்ளனர். இதையொட்டி மாங்கல்ய பொட்டு, பட்டு அங்கவஸ்திரம் அளித்தல், மணவறை மற்றும் மின் அலங்காரம் போன்ற நிகழ்வுகள் நடக்கிறது. 18-ந் தேதி காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
வருகிற 19-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் நரசிம்ம சாமி தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

Next Story