தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் -மகளிர் தின கருத்தரங்கில் தீர்மானம்


தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் -மகளிர் தின கருத்தரங்கில் தீர்மானம்
x
தினத்தந்தி 10 March 2022 12:39 AM IST (Updated: 10 March 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என உலக பெண்கள் தினம் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமேசுவரம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என உலக பெண்கள் தினம் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மகளிர் தின விழா
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அமைப்பு சார்பில் பாம்பனில் புயல் காப்பகம் அருகில் உலக மகளிர் தின விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. தங்கச்சிமடம் ராஜேஸ் மேரி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அமைப்பு அலுவலர் ஜெயந்தி, பேரையூர் பஞ்சாயத்து தலைவி ரூபி, வழக்கறிஞர் அனீஸ் சோனியா சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர் ஒன்றிய தலைவி இருதய ராணி வரவேற்று பேசினார். பங்குத்தந்தை பிரிட்டோ ஜெயபாலன் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். முழுமையாக மதுக்கடைகளை அகற்ற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அரசு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலுக்கு கடுமையான தண்டனை தர சட்டம் இயற்ற வேண்டும். மீனவர்களுக்கு கூடுதல் டீசல் மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஆர்.எஸ். மங்கலம் ஒன்றிய தலைவி கலையரசி நன்றி கூறினார்.
பல்வேறு போட்டி
இதேபோல ராமநாதபுரம் வேலுமனோகரன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தினவிழா தாளாளர் மனோகரன் தலைமையில் நடந்தது. துணை தாளாளர் பார்த்தசாரதி, செயலர் சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் காஞ்சனா வரவேற்றார். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினார். விழாவில் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story