தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி
சாலை பள்ளத்தை சரி செய்ய வேண்டும்
வேலூர் சத்துவாச்சாரி டபுள்ரோடு அருகே விவேகானந்தர் 1-வது தெருவில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜாதிருவேங்கடம், வேலூர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
வேலூர் மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஆற்காடு சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே செல்கிறது. குறிப்பாக அங்குள்ள தனியார் மருத்துவமனை பகுதியை வாகனங்கள் கடந்து செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு மேலாகிறது. ஆற்காடு சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் தள்ளுவண்டி கடைகள் மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் கடைகளால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்கிறார்கள். தள்ளுவண்டி கடைகளால் இருசக்கர வாகனங்கள் சாலையோரம் பொதுமக்கள், போக்குவரத்து இடையூறாக தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தள்ளுவண்டி கடைகள், நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரவீன், தோட்டப்பாளையம்.
ஆபத்தை உணராத பயணம்
பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பஸ்களில் செல்லும் மாணவர்கள் பகலிலும் மாலையிலும் பெரும்பாலும் படிகளில் தொங்கியபடி செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று திருவண்ணாமலை அருகில் உள்ள மங்கலம் பகுதியின் வழியாக சென்ற அரசு பஸ்சில் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர். ‘படியில் பயணம் நொடியில் மரணம்’ என்று பஸ்களில் எழுதி வைத்திருந்தாலும் மாணவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை. படிகளில் தொங்கி பயணம் செய்யும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொண்டால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கலாம்.
-கோவிந்தன், திருவண்ணாமலை.
கழிவுநீர் அகற்றப்படுமா?
வேலூர் சத்துவாச்சாரி பேஸ் 3-ல் அன்னை தெரசா 2-வது தெருவில் இருந்து 4-வது தெருவுக்கு செல்லும் பகுதியில் திருப்பம் உள்ளது. இங்கு கால்வாய் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், பல மாதங்களாக கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதாரச் கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். கால்வாய் பணி முடிய கால தாமதம் ஆகும் நிலையில், கழிவுநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்தாஸ், வேலூர்.
வீணாகும் குடிநீர்
வேலூர் சத்துவாச்சாரி பகுதி 3-ல் காந்தி நகர் உள்ளது. இங்கு இருந்து நேதாஜி போஸ் தெருவுக்கு செல்லும் வழியில் உள்ள சில குடிநீர் குழாய்களில் அடைப்பு இல்லாத காரணத்தால், தண்ணீர் வினியோகம் செய்யும் நேரங்களில் குடிநீர் வீணாக வெளியேறுகிறது. குழாய்களில் அடைப்பு பொருத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணியம், வேலூர்.
Related Tags :
Next Story