காலிமனையில் பிணமாக கிடந்த பிரியாணி கடை உரிமையாளர்


காலிமனையில் பிணமாக கிடந்த பிரியாணி கடை உரிமையாளர்
x
தினத்தந்தி 13 March 2022 2:55 AM IST (Updated: 13 March 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

காலிமனையில் பிரியாணி கடை உரிமையாளர் பிணமாக கிடந்தார்.

பெரம்பலூர்:

ஆண் பிணம்
பெரம்பலூர் நான்கு ரோடு டாஸ்மாக் கடை அருகே கீர்த்தனா நகர் பகுதியில் நேற்று காலை ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தவர் உடல் அருகே மது பாட்டில்கள், பூச்சி கொல்லி மருந்து(விஷம்) பாட்டில் ஆகியவை கிடந்தன. மேலும் ஒரு மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பிரியாணி கடை உரிமையாளர்
விசாரணையில், இறந்து கிடந்தவர் குன்னம் தாலுகா, நன்னை நடுத்தெருவை சேர்ந்த செல்லப்பிள்ளை மகன் சேகர்ராஜூ (வயது 34) என்பது தெரியவந்தது. அவர் தற்போது தனது மனைவி சரிதா மற்றும் ஒரு மகன், மகளுடன் பெரம்பலூர் நான்கு ரோடு செல்வா நகரில் வசித்து வந்தார். மேலும் அவர் நான்கு ரோடு, புதிய பஸ் நிலையம், தண்ணீர்பந்தல் ஆகிய 3 இடங்களில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார். தண்ணீர் பந்தலில் கடந்த வாரம் தான் புதிதாக கடை திறந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கடை ஊழியர்களிடம் சிறுவாச்சூர் சென்று வருவதாக கூறி விட்டு சேகர் ராஜூ வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் கடைக்கும், வீட்டிற்கும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும், கடை ஊழியர்களும் சேகர் ராஜூவை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலை பெரம்பலூர் நான்கு ரோடு டாஸ்மாக் கடை அருகே கீர்த்தனா நகர் காலி மனையில் சேகர் ராஜூ இறந்து கிடந்தது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அங்கு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சேகர் ராஜூ ஓட்டி வந்தது என்பது தெரியவந்தது. மேலும் சேகர் ராஜூ இறந்து கிடந்த தகவலை போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த குடும்பத்தினர், உறவினர்கள், கடை ஊழியர்கள் சேகர் ராஜூவின் உடலை பார்த்து கதறி அழுதனர். சேகர் ராஜூ குடும்ப பிரச்சினை அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சேகர் ராஜூவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story