திருமுல்லைவாயல் அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு

திருமுல்லைவாயல் அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலத்தை கோவில் செயல் அலுவலர் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்டனர்.
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சையம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்து, அந்த இடத்தில் ஜல்லி, மண் ஆகியவற்றை கொட்டி பயன்படுத்தி வருவதாக இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் தனபாலுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் பெரம்பூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் அறிவழகன் மற்றும் திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் இளங்குமரன் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்டனர். அந்த இடத்தை சுற்றிலும் இரும்பு வேலியும் அமைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story