ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின்பொறியாளர் கைது

விவசாயத்திற்கு இலவச மின்இணைப்பு வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
உசிலம்பட்டி,
விவசாயத்திற்கு இலவச மின்இணைப்பு வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
விருப்பமனு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது உத்தப்ப நாயக்கனூர். இந்த ஊரில் உள்ள துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார். இவர் தனது விவசாய தோட்டத்திற்கு மின் இணைப்பு பெற 2010-ம் ஆண்டு விருப்பமனு அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த மனுவிற்கு கடந்த 2021-ம் ஆண்டு மின் இணைப்பு வழங்க உத்தரவு கிடைத்த நிலையில் சிறிது காலத்திலேயே இலவச மின் இணைப்பு வழங்க அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த இலவச மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி தொடர்ந்து உத்தப்பநாயக்கனூர் துணை மின் நிலையத்திற்கு வந்த சசிக்குமாரிடம் ரூ. 30 ஆயிரம் லஞ்சமாக உதவி மின் பொறியாளர் சக்திவேல் கேட்டுள்ளார்.
கைது
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் அளித்த சசிக்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை உதவி பொறி யாளர் சக்திவேலிடம் வழங்கிய போது மறைந்திருந்த மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் குமரகுரு தலைமையிலான போலீசார் கையும் களவுமாக சக்திவேலை பிடித்தனர்.
தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக உதவி மின் பொறியாளர் சக்திவேலிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story