முதல் பட்டதாரி ஊக்கத்தொகை வழங்கக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

முதல் பட்டதாரி ஊக்கத்தொகை வழங்கக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக முதல் பட்டதாரி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் முதல் பட்டதாரி ஊக்கத்தொகையை வழங்க கோரியும், கல்விக் கட்டணத்தை குறைக்க கோரியும் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர்.
தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் மற்றும் அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் பொறியியல் புல முதல்வர் பேராசிரியர் முருகப்பன், பல்கலைக்கழக மாணவர் உதவி மற்றும் முன்னேற்ற மைய இயக்குனர் பேராசிரியர் தெய்வசிகாமணி ஆகியோரும் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது முதல் பட்டதாரி ஊக்கத்தொகையை கழித்து கல்வி கட்டணத்தை மாணவர்கள் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 4 மணி நேர போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story