கிணற்றில் வீசப்பட்ட ஆண் குழந்தையின் உடல் மீட்பு

கிணற்றில் வீசப்பட்ட ஆண் குழந்தையின் உடல் மீட்பு
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் முகலார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை.
இவரின் மனைவி கமலா. குடும்ப பிரச்சினையால் நேற்று காலை கமலா தனது 4 வயது பெண் குழந்தை மற்றும் 7 மாத ஆண் குழந்தையுடன் திருவண்ணாமலைக்கு வந்துள்ளார்.
எடப்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் ஆண் குழந்தையை வீசி விட்டு, உடன் வந்த பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் இருந்து கமலா, 4 வயது பெண் குழந்தையை உயிருடன் மீட்டனர். 7 மாத ஆண் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் வீசப்பட்ட ஆண் குழந்தையின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றி குழந்தையின் உடலை மீட்கும் முயற்சி நேற்று நள்ளிரவு வரை நடந்தது.
அதைத்தொடர்ந்து 2-வது நாளாக இன்று காலையிலும் தேடும் பணி நடந்தது.
அப்போது ஆண் குழந்தையின் உடல் கிடைத்தது. குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்குப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story