காண்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது


காண்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது
x
தினத்தந்தி 1 May 2022 10:08 PM IST (Updated: 1 May 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

காண்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது

தளி:
உடுமலையைஅடுத்த திருமூர்த்தி அணையின் முக்கிய நீராதாரமான காண்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
திருமூர்த்தி அணை
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதற்காக பாசன நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 
பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் தரப்படும் தண்ணீரும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் காட்டாறுகள், பாலாறு மற்றும் திருமூர்த்திமலை ஆறு ஆகியவற்றின் மூலம் பெறப்படுகின்ற தண்ணீரும் திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களாகும்.
மழை பொலிவு
 அதை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குமரலிங்கம், பூலாங்கிணர் மற்றும் குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தொடங்கிய தென்மேற்கு பருவமழையில் இருந்து இந்த ஆண்டில் முடிவுற்ற வடகிழக்கு பருவமழை வரையிலும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பொழிவு நன்றாக இருந்தது. இதனால் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 
அதைத்தொடர்ந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் திருமூர்த்தி அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தண்ணீர் நிறுத்தம்
இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நீர்வரத்திற்கு ஏற்றவாறு தானியங்கள், பயறுவகைகள், காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். தற்போது இறுதி சுற்று தண்ணீர் சென்று கொண்டு உள்ளது. வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. 
இந்த சூழலில் பராமரிப்பு பணி காரணமாக காண்டூர் கால்வாயில் திடீரென தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டுள்ள நிலையில் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். எனவே பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து தண்ணீரை திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story