சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜனதா தலைவரை கண்டித்த அமித்ஷா

சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் கருத்து தெரிவித்த பா.ஜனதா தலைவர் கிரிராஜ் சிங்கை அமித்ஷா கண்டித்துள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.யும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவிப்பவர். பா.ஜனதாவை விமர்சனம் செய்பவர்களை எல்லாம் இந்தியாவிற்கு எதிரானவர்கள், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என கூறுபவர். பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், சுஷில் குமார் மோடி (பா.ஜனதா) உள்ளிட்டோர் இப்தார் விருந்தில் கலந்து கொண்டதை கிண்டல் செய்துள்ளார்.
இப்தார் விருந்து நிகழ்ச்சியில் நிதிஷ் குமார், சுஷில் குமார் மோடி, ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள கிரிராஜ் சிங், “இதே நவராத்திரி விழாவில் உணவு விருந்தில் கலந்து கொண்ட புகைப்படமாக இது இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். நம்முடைய நம்பிக்கையை ஏன் மறைத்து கொள்ள வேண்டும். ஏதற்கு இதுபோன்ற பாசாங்கு? என்பது போன்ற கருத்தை தெரிவித்து இருந்தார். இது விமர்சனம் ஆனது. இதற்கு பதில் கொடுத்த நிதிஷ் குமார், கிரிராஜ் சிங் இதுபோன்று வேண்டுமென்றே பேசுவார். நீங்களும் செய்தியாக்கலாம் என கூறிவிட்டார்.
இந்நிலையில் பா.ஜனதா தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, கிரிராஜ் சிங்கை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற கருத்துக்களை தவிர்த்து விடுங்கள், இது மீண்டும் நடக்கக்கூடாது என அமித்ஷா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story