தெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்

தெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு வரலா என்பவர் வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் தனது பாடத்தில் பின்தங்கிய மாணவர்களிடம், பல்கலைக்கழக துணைத்தேர்வில் வெற்றி பெறவும், கூடுதல் மதிப்பெண்கள் வழங்கவும் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.
இது குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை பல்கலைக்கழகம் அமைத்தது. இந்த குழுவினர் நடத்திய விசாரணையில், பேராசிரியர் வரலா மீதான புகார்கள் உண்மை என கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை பணிநீக்கம் செய்து பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் நடவடிக்கை எடுத்து உள்ளது. முன்னதாக அவர் மீது போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story