நாடாளுமன்ற மேலவையில் வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு வழியே நிறைவேற்றம்


நாடாளுமன்ற மேலவையில் வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு வழியே நிறைவேற்றம்
x
தினத்தந்தி 20 Sep 2020 8:56 AM GMT (Updated: 20 Sep 2020 8:56 AM GMT)

நாடாளுமன்ற மேலவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்கிடையே, வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு வழியே நிறைவேற்றப்பட்டன.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாக்களின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள், சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது எனவும் திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன. 

மேலும், மசோதா மீது விவாதத்திற்கு பதிலளிப்பதை ஒத்திவைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், எதிர்க்கட்சிகள் கோரிக்கை குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டதாக கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மைய பகுதிக்கு வந்து, மசோதாவின் நகல்களை கிழித்து எறியவும் முயற்சித்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் அமளியை அடுத்து மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் அவை மீண்டும் கூடியது.  வேளாண் மசோதாக்கள் பற்றி விவாதங்கள் நடைபெற்றன.  இந்த விவாதத்தின்பொழுது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தெரீக் ஓ பிரையன் அவையின் மைய பகுதிக்கு வந்து, அவை துணை தலைவர் ஹரிவன்ஷிடம், அவைக்கான விதி புத்தகம் ஒன்றை எடுத்து காண்பித்து பேசினார்.

அவரை தொடர்ந்து அவையில் இருந்த மற்ற உறுப்பினர்களும் அவையின் மைய பகுதிக்கு வந்தனர்.  அவர்கள் அனைவரையும் இருக்கைகளில் அமரும்படி துணை தலைவர் ஹரிவன்ஷ் கேட்டு கொண்டார்.  எனினும் உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

இந்நிலையில், வேளாண் மசோதாக்களுக்கான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.  இவற்றில் அந்த மசோதாக்கள் எதிர்க்கட்சியினர் எதிர்ப்புக்கிடையே உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.  இதனை தொடர்ந்து மேலவை நாளை காலை 9 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Next Story