1 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் என்ஜினீயரிங் படிப்பு பொது கலந்தாய்வு தொடங்கியது விருப்ப இடங்களை தேர்வு செய்ய 2 நாட்கள் அவகாசம்


1 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் என்ஜினீயரிங் படிப்பு பொது கலந்தாய்வு தொடங்கியது விருப்ப இடங்களை தேர்வு செய்ய 2 நாட்கள் அவகாசம்
x
தினத்தந்தி 8 Oct 2020 11:25 PM GMT (Updated: 8 Oct 2020 11:25 PM GMT)

1 லட்சத்து 10 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கும் என்ஜினீயரிங் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. விருப்ப இடங்களை மாணவர்கள் தேர்வு செய்வதற்கு 2 நாட்கள் அவகாசம் வழங் கப்பட்டு இருக்கிறது.

சென்னை,

2020-21-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 461 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆன்லைன் மூலமாக நடத்தி வருகிறது. அந்தவகையில் என்ஜினீயரிங் படிப்புக்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி 6-ந்தேதியுடன் நிறைவு பெற்றது.

சிறப்பு பிரிவு மாணவர்களான விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் பிரிவு ஆகியோருக்கு மொத்தம் 7 ஆயிரத்து 435 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. கலந்தாய்வு மூலம் வெறும் 497 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. மீதமுள்ள 6 ஆயிரத்து 938 இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டது.

அதன்படி, பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கி இருக்கிறது. இதற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்கள் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 4 கட்டங்களாக என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெற உள்ளது.

முதல் கட்ட கலந்தாய்வு 8-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட கலந்தாய்வு 12-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரையிலும், 3-ம் கட்ட கலந்தாய்வு 16-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரையிலும், 4-ம் கட்ட கலந்தாய்வு 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது.

ஒவ்வொரு கட்டமாக நடைபெறும் கலந்தாய்வுகளில் முதல் 4 நாட்கள் முன்பணம் செலுத்துவதற்கும், அடுத்த 2 நாட்கள் விருப்ப இடங்கள் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கும், அதற்கு அடுத்த நாள் தற்காலிக ஒதுக்கீடும், அதனை மாணவர்கள் உறுதி செய்வதற்கு அடுத்த 2 நாட்களும் அவகாசம் வழங்கப்பட்டு, இறுதியாக கலந்தாய்வு தொடங்கிய 9-வது நாளில் இறுதி ஒதுக்கீடு ஆணை வெளியிடப்பட உள்ளது.

மாணவர்கள் கலந்தாய்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்னென்ன செய்ய வேண்டும்? என்பது உள்பட கலந்தாய்வு தொடர்பான விவரங்களை தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை(டி.என்.இ.ஏ.) இணையதளத்தில் வீடியோவாக வெளியிடப்பட்டு இருக் கிறது. விருப்ப இடங்களை மாணவர்கள் தேர்வு செய்யும்போது அதிகளவில் விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நேற்று தொடங்கியுள்ளது. 1,533 மாணவர்கள் பங்கு பெறும் இந்த கலந்தாய்வு ஒரே கட்டமாக 16-ந்தேதி வரை நடத்தப்பட்டு, இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட இருக்கிறது.

Next Story