2வது முறையாக பிறந்து உள்ளேன்; பாகிஸ்தானில் 29 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த இந்தியர் பேட்டி


2வது முறையாக பிறந்து உள்ளேன்; பாகிஸ்தானில் 29 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த இந்தியர் பேட்டி
x
தினத்தந்தி 28 Dec 2021 3:24 AM IST (Updated: 28 Dec 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் 29 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த இந்தியர் குல்தீப் சிங் 2வது முறையாக பிறந்து உள்ளேன் என பேட்டியில் கூறியுள்ளார்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம் மக்வால் கிராம பகுதியை சேர்ந்தவர் குல்தீப் சிங்.  பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லை பகுதியில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 1992ம் ஆண்டு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு, தான் லாகூர் சிறையில் இருப்பதாகவும், தனக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் குல்தீப் சிங் தனது குடும்பத்தினருக்கு கடிதம் எழுதினார்.

இந்த சூழலில் கடந்த 8 ஆண்டுகளாக குல்தீப் சிங்கிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டிருப்பாரோ என குடும்பத்தினர் கவலைக்குள்ளாகினர்.

இந்த நிலையில் 29 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பிறகு 53 வயதில் குல்தீப் சிங் அண்மையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  பின்னர் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.

அங்கு பட்டாசுகள் வெடித்தும், மலர்களை தூவியும், கரன்சி நோட்டுகளை அணிவித்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், எல்லை பகுதியில் பணி செய்தபோது, வழி மறந்து பாகிஸ்தானுக்குள் சென்று விட்டேன்.

அந்நாட்டில் கைது செய்யப்படுபவர்கள் எவரையும், உளவாளிகள் என்று நினைத்து விடுகின்றனர்.  எனக்கும் இதேபோன்று நடந்தது.  வீடு திரும்பியது 2வது முறையாக பிறந்தது போன்றது என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் சிறையில் தங்களது தண்டனை காலம் முடிந்து விடுதலைக்காக காத்திருக்கும் இந்தியர்களை விடுவிக்க அரசு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வேண்டி கேட்டு கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story