இந்திய கலை பொருட்களை திருப்பி தந்ததற்கு ஆஸ்திரேலிய பிரதமருக்கு பிரதமர் மோடி நன்றி

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலை பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி தந்ததற்காக, பிரதமர் மோடி அனைத்து இந்தியர்களின் சார்பில் ஆஸ்திரேலிய பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியா - ஆஸ்திரேலியா இருதரப்பு உச்சி மாநாடு இன்று திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை பல்வேறு துறைகளில் ஆஸ்திரேலியா அறிவிக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கும் இடையிலான இன்றைய மெய்நிகர் சந்திப்புக்கு முன்னதாக, 29 தொல்பொருட்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு இன்று திருப்பி அனுப்பப்பட்டன.
சிவன், சக்தி, விஷ்ணு சிலைகள், ஜெயின் பாரம்பரியம், உருவப்படங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் என ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த பழங்கால பொருட்களை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
இந்த 29 பழங்கால பொருட்கள், மணற்கல், பளிங்கு, வெண்கலம், பித்தளை, காகிதம் என பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் ஆகும். இந்த பழங்கால பொருட்கள் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவை ஆகும்.
இதனை தொடர்ந்து மெய்நிகர் கூட்டமொன்றில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த சந்திப்பில், பிரதமர் பேசும்போது, இந்திய கலை பொருட்களை திருப்பி ஒப்படைத்து அரும்பணியை தொடங்கியதற்காக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நூறாண்டுகள் பழமை வாய்ந்த கலை பொருட்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட நீங்கள் திருப்பி அனுப்பி வைத்த பொருட்கள் யாவும், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், குஜராத், இமாசல பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சட்டவிரோத வகையில் எடுத்து செல்லப்பட்டவை ஆகும். அவற்றை மீண்டும் திருப்பி அனுப்பியதற்காக, அனைத்து இந்தியர்களின் சார்பில் நான் உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story