பெண் ஊழியரிடம் தகாத முறையில் பழகிய நீதிபதியின் வீடியோவை தடை செய்ய டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு!

நீதிபதி ஒருவர் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி கோர்ட்டு நீதிபதி ஒருவர் தனது அறையில் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அந்த நீதிபதி தனது அறையில் சக பெண் ஊழியருடன் தகாத முறையில் உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன.
இந்நிலையில், இந்தக் காட்சிகளை வெளியிடுவதைத் தடுக்கக் கோரிய மனுவை டெல்லி ஐகோர்ட்டு நேற்று விசாரித்தது. அப்போது மனுதாரரின் அடையாளத்தை மறைக்க நீதிமன்றம் அனுமதித்ததால், இந்த வழக்கை யார் வழக்கு தாக்கல் செய்தார்கள் என்பது தெரியவில்லை.
வீடியோவின் பாலியல் தன்மை மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் தனியுரிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்த வீடியோவை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா உத்தரவிட்டார்.இது தொடர்பாக அனைத்து ஆன்லைன் செய்திகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அறையில் பாலியல் நோக்கத்துடன் தகாத முறையில் நடந்து கொண்ட நீதிபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்தன. இந்த வழக்கை டிசம்பர் 9ஆம் தேதி டெல்லி ஐகோர்ட்டு விசாரிக்கவுள்ளது.