தாசில்தார் கார் டிரைவரின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் மோசடி

சிருங்கேரியில் தற்கொலை செய்துகொண்ட தாசில்தார் கார் டிரைவரின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியை சேர்ந்தவர் விஜேத்(வயது 32). இவர், சிருங்கேரி தாசில்தார் அம்புஜாவின் கார் டிரைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் தாசில்தார் அம்புஜா நிலப்பட்டா வழங்குவதில் மோசடி செய்ததால் கைது செய்யப்பட்டார். இதனால் பய்ந்துபோன விஜேத், போலீசார் தன்னையும் கைது செய்து விடுவார்கள் என்று எண்ணி கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பாக அந்தப்பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. அவர் இறந்த பின்பும் வங்கியில் இருந்து வாங்கிய கடனுக்கான தொகையை வங்கிக்கணக்கில் இருந்து பல தவணைகளாக எடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து விஜேத்தின் தந்தை கூறுகையில், தனது மகன் இறந்த பின்பும் அவருடைய பணத்தை எப்படி கூட்டுறவு வங்கி எடுக்கலாம். இதனால் கூட்டுறவு வங்கி மோசடி செய்து உள்ளது. அதேபோல் மகன் இறந்த பின்பும், அதிகப்படியான வட்டி வாங்கி பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என கூறி நோட்டீஸ் அனுப்புவதாகவும் நியாயம் கேட்டு நுகர்வோர் கோர்ட்டுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.