பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தமிழக வாலிபர் கைது

பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தமிழக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலாசிபாளையம், டிச.23-
பெங்களூரு கலாசிபாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜே.சி.ரோட்டில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. அந்த விடுதியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் அறை எடுத்து தங்கினார். அவர், பேஷன் டிசைன் படிப்பில் சேருவதற்காக பெங்களூருவுக்கு தனது கணவருடன் வந்திருந்தார். ஜே.சி.ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து கணவனும், மனைவியும் தங்கி இருந்தார்கள்.
இந்த நிலையில், அந்த பெண் குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றார். அவர் குளித்து கொண்டு இருந்த போது வென்டிலேசன் விசிறி இருந்த பகுதியில் ஒரு செல்போன் இருப்பதை அந்த பெண் கண்டு பிடித்தார். தான் குளிப்பதை வீடியோ எடுப்பதை உறுதி செய்ததால், அந்த பெண் சத்தம் போட்டு கூச்சலிட்டார். உடனே பக்கத்து அறையில் இருந்த வாலிபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதுபற்றி கலாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது மராட்டிய பெண் தங்கி இருந்த அறையின் அருகே தமிழ்நாட்டை சேர்ந்த முத்துகுமார் தனது நண்பர்களுடன் தங்கி இருந்தது தெரிந்தது. முத்துகுமார் தான் அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து, முத்துகுமார் கைது செய்யப்பட்டார்.
மெக்கானிக்கான முத்துகுமார், பெங்களூருவுக்கு இருசக்கரவாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்குவதற்காக வந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. முத்துகுமார்மீது கலாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.