சக்லேஷ்புரா வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ


சக்லேஷ்புரா வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ
x

சக்லேஷ்புரா வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வன காவலர்கள் 4 பேர் தீயில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.

ஹாசன்:-

வனப்பகுதியில் காட்டுத்தீ

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவில் வனப்பகுதி நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் மாரனஹள்ளி அருகே உள்ள இத்திகேகூடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென்று காாட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென வனப்பகுதியில் இருந்த புற்கள், மரங்கள், செடி-கொடிகளுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனக்காவலர்கள் 6 பேர் விரைந்து சென்று காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை.

4 பேர் படுகாயம்

இதற்கிடையே காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வனக்காவலர்கள் மஞ்சுநாத், சுந்தரேஷ், மகேஷ், துங்கேஷ் ஆகிய 4 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 2 பேரும் உடனடியாக 4 பேரையும் மீட்டனர். மேலும் அவர்கள் உடலில் பிடித்த தீயையும் அணைத்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் விரைந்து வந்து பலத்த காயம் அடைந்த 4 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காடுமனே கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஹாசன் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கடும் வெயிலால்...

இதையடுத்து இத்திகேகூடு வனப்பகுதிக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், அதற்குள் ஏராளமான மரங்கள், செடி-கொடிகள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் வனவிலங்குகள் ஏதாவது சிக்கி உயிரிழந்ததா? என்பது தெரியவில்லை.

சக்லேஷ்புரா வனப்பகுதியில் கடந்்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.


Next Story