"ராகுல்காந்தியை சிறையில் தள்ளி குரலை நசுக்க பார்க்கிறார்கள்" - பிரியங்கா காந்தி பேச்சு


ராகுல்காந்தியை சிறையில் தள்ளி குரலை நசுக்க பார்க்கிறார்கள் - பிரியங்கா காந்தி பேச்சு
x

ராகுல்காந்தியை சிறையில் தள்ளி குரலை நசுக்க பார்க்கிறார்கள் என்று பிரியங்கா காந்தி கூறினார்.

புதுடெல்லி,

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் உள்ள ராஜ்காட் அருகே காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:-

ராகுல்காந்தியை சிறையில் தள்ளி குரலை நசுக்க பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் எனது சகோதரர் அஞ்சக்கூடியவர் அல்ல. நாங்கள் பயப்பட மாட்டோம். சத்தியத்திற்கும் ஒரு சக்தி உண்டு, ஜனநாயகத்தை காங்கிரஸ் பாதுகாக்கும்.

பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர்களும் எனது தாயை பல தருணங்களில் அவமானப்படுத்தி உள்ளனர். எங்கள் குடும்பத்தை அவர்கள் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள். ஒருவரை தொடர்ந்து இழிவுபடுத்துவதுதான் நாட்டு மரபா? ஜனநாயகம் என்றால் என்ன என்பதை எனது குடும்பம் அதன் ரத்தத்தில் கற்றுக்கொண்டது.

தியாகியின் மகனான எனது சகோதரனை துரோகி என்று சொல்கிறீர்கள். ஆனால் பாராளுமன்றத்தில் மோடியிடம் சென்று ராகுல்காந்தி கட்டி பிடித்தார். எனது சகோதரர் அவரிடம் சென்று எந்த வெறுப்பும் இல்லை என்றார். சித்தாந்தங்கள் வேறுபடலாம். ஆனால் வெறுப்பு இல்லை என்றார்.

இவ்வாறு பிரியங்கா பேசினார்.


Next Story