மறுஉத்தரவு வரும் வரை மெட்ரோ பணிகளுக்காக மரங்களை வெட்டலாம்

இயற்கை ஆர்வலர் தொடர்ந்த வழக்கில், மறுஉத்தரவு வரும் வரை மெட்ரோ பணிகளுக்காக புதிதாக மரங்களை வெட்டி, அகற்ற ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
பெங்களூரு:-
கடந்த 2011-ம் ஆண்டில்...
பெங்களூருவில் ஐ.டி.நிறுவனங்கள் கொட்டி கிடக்கின்றன. அந்த நிறுவனங்களில் கர்நாடகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு வேலைக்காக வருபவர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இதனால் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் என்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. வாகனங்கள் அதிகரிப்பால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் சவாலை சந்திக்கின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் வாகன போக்குவரத்தை குறைக்கும் முயற்சியாக கடந்த 2011-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து பையப்பனஹள்ளி-கெங்கேரி உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஐகோர்ட்டு அனுமதி
மெட்ரோ பணிகளுக்காக இதுவரை 5 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் இயற்கை ஆர்வலரான தட்டத்ரேயா என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மெட்ரோ பணிகளுக்காக இதுவரை வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக வேறு இடங்களில் புதிதாக மரங்கள் நடப்பட்டதா, சில மரங்கள் பாதுகாப்பான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டதா உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு இருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை நீதிபதி பிரசன்னா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, மெட்ரோ பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டது குறித்தும், தற்போது வரை நடப்பட்டுள்ள மரங்கள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மறுஉத்தரவு வரும்வரை மெட்ரோ நிர்வாகம், ரெயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு மரங்களை வெட்டி அகற்றலாம், இடமாற்றம் செய்யலாம் என அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு(2023) ஜனவரி 11-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.