வன்முறையில் ஈடுபட டி.டி.வி.தினகரன் அணியினர் திட்டம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பாதுகாப்பு கோரிக்கை


வன்முறையில் ஈடுபட டி.டி.வி.தினகரன் அணியினர் திட்டம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பாதுகாப்பு கோரிக்கை
x
தினத்தந்தி 4 April 2017 2:51 AM IST (Updated: 4 April 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று ராஜேஷ் லக்கானியிடம், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த எம்.பி.மைத்ரேயன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆகியோர் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

எங்கள் அணியின் தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, அங்கு சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் மிகப்பெரிய அளவில் வன்முறையை நடத்த வேண்டும் என்று அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள். மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் ஆகியோரை அ.தி.மு.க. அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தூண்டிவிட்டிருக்கிறார்.

செருப்பு காட்டி எதிர்ப்பு

2–ந் தேதியன்று மாலை 6 மணி அளவில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜு, எம்.எல்.ஏ. அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் சேர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு செருப்பு காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த தொண்டர்களையும் தாக்கினர்.

போலீஸ் பாதுகாப்பு

எனவே, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர் தலைமையில் மட்டும் 500 குண்டர் படை உள்ளது. அவர்களின் ஆதரவாளர்களின் வீட்டில் வன்முறைக்காக ஆயுதங்களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு 7 போலீசார் மட்டுமே பாதுகாப்பு அளிக்கின்றனர். அவர் பிரசாரம் செய்யும்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். விநாயகபுரம் 43–வது வார்டில் வாக்காளர்களுக்கு ரூ.4 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற புகார் மனு ஒன்றை சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியினர் கொடுத்தனர்.


Next Story