இருதரப்பினர் இடையே மோதல்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்தது வாகனம் மீது கல்வீச்சு-தடியடி


இருதரப்பினர் இடையே மோதல்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்தது வாகனம் மீது கல்வீச்சு-தடியடி
x
தினத்தந்தி 2 Jun 2017 2:30 AM IST (Updated: 2 Jun 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்தது.

கம்பம்,

கம்பத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்தது. மேலும் ஜீப் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதையொட்டி போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த மோதல் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரம்ஜான் தொழுகை

கம்பம் காட்டுபள்ளிவாசல் ரோட்டில் அஜிஸ்யா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் அருகே பெண்கள் தொழுகை நடத்துவதற்காக தனியாக வீடு உள்ளது. தற்போது ரம்ஜான் நோன்பை முன்னிட்டு, இந்த வீட்டில் ஏராளமான பெண்கள் தொழுகை நடத்தி வருகிறார்கள். நேற்று இரவு 8 மணி அளவில் சில பெண்கள் தொழுகை நடத்த சென்றனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் பெண்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த ஒலிபெருக்கி வயர்களையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாமலை, போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திக்கொண்டு இருந்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர்

அப்போது திடீரென இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் கற்களை வீசி ஒருவரையொருவர் தாக்கினார்கள். இதில், போலீஸ் ஜீப் கண்ணாடி உடைந்தது. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலையிலும் கற்கள் விழுந்தன. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர் சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மோதல் குறித்து தகவல் அறிந்ததும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இரு தரப்பினரும் திரண்டதால் மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மோதல் சம்பவம் எதிரொலியாக கம்பம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரவு முழுவதும் போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story