அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் ‘திடீர்’ பரபரப்பு


அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் ‘திடீர்’ பரபரப்பு
x
தினத்தந்தி 15 Jun 2017 11:00 PM GMT (Updated: 15 Jun 2017 8:31 PM GMT)

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் முடிவடைந்தவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் உள்ள அவருடைய அலுவலகத்தில் டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 34 பேரும் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு முடிவடைந்தவுடன் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரச ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி உள்பட அமைச்சர்களும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், ராஜன் செல்லப்பா, மாவட்ட செயலாளர் கலைராஜன் மற்றும் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, கோகுல இந்திரா, நவநீத கிருஷ்ணன் எம்.பி., உள்பட முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

மாலை 6 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் இரவு 7.15 மணியளவில் முடிவடைந்தது. ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ஆலோசனை கூட்டத்தில் எது குறித்து விவாதிக்கப்பட்டது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து ஜெயகுமார் கூறும்போது, ‘அ.தி.மு.க. கட்சி, சின்னத்தை மீட்பதற்காக இந்திய தேர்தல் கமிஷனில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மிகவும் எழுச்சியுடன், பிரமிக்கத்தக்கவிதமாக, தமிழ்நாடு இதுவரையில் கண்டிராத வகையில் மாவட்ட, மாநில அளவில் கொண்டாட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.’ என்றார்.

டி.டி.வி.தினகரனுடன்...

எனினும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், ‘டி.டி.வி.தினகரன் தலைமையில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெற வேண்டும். 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story