அ.தி.மு.க. கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


அ.தி.மு.க. கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 9 March 2019 11:45 PM GMT (Updated: 9 March 2019 7:31 PM GMT)

அ.தி.மு.க. கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்து வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சேலம், 

அ.தி.மு.க. கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்து வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சேலம் அருகே ஓமலூர் அ.தி.மு.க. அலுவலகத்தில் அ.தி.மு.க.-பா.ம.க. நிர்வாகிகள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகள் சதி

அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. இதனால் நமது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரண்டு, மிரண்டு போய் உள்ளார். இந்த மெகா கூட்டணியில் இன்னும் ஒரு சில கட்சிகள் இணைய உள்ளது. கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்து வருகின்றனர்.

அதாவது, பாலில் ஒருதுளி விஷம் கலந்தாலும் பால் கெட்டுவிடும். இதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் மிகவும் கவனமாக இருந்து தேர்தலில் பணியாற்ற வேண்டும். நாம் வலிமையான கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணி வலிமையை தேர்தல் மூலம் நாம் உணர்த்த வேண்டும்.

40 தொகுதிகளிலும்

ஏற்கனவே அ.தி.மு.க.வில் 37 எம்.பி.க்களும், பா.ம.க.வில் ஒரு எம்.பி.யும், பா.ஜனதா கட்சியில் ஒரு எம்.பி.யும் என மொத்தம் 39 எம்.பி.க்கள் கூட்டணியில் உள்ளனர். எனவே, இந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்த சந்தர்ப்பம் என்றைக்கும் கிடைக்காது. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் மத்தியில் பலர் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் ஒரு மாத கால அவகாசமாக இருக்கும். எனவே, காலம் கடத்தாமல் அனைத்து வாக்குகளையும் சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டும். கூட்டணி இறுதியான பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கூட்டணி நிர்வாகிகளை சந்தித்து ஊழியர் கூட்டம் நடத்த உள்ளேன். இந்த கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பேட்டி

சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை தலைமை செயலகத்தில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, என்னை மரியாதை நிமித்தமாக சந்தித்து மக்களின் கோரிக்கைகளை முன் வைத்தார். அதில் என்ன தவறு இருக்கிறது. எதிர்க்கட்சியினர் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசக்கூடாது. பூத கண்ணாடியை வைத்து பார்த்தால் கூட எங்களிடம் குறைகளை கண்டுபிடிக்க முடியாது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூட என்னை பலமுறை கோட்டையில் சந்தித்து பேசியுள்ளார். எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுப்பதற்கு அனைத்து உரிமையும் உள்ளது. இதில் தவறு ஏதும் இல்லை.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இதற்கு முன்பு அவர்களை எந்த அளவிற்கு வசை பாடினார் என்று தெரியுமா?. ஆனால் இப்போது அவர்களை புகழ்ந்து பேசி வருகிறார்.

நாட்டின் பாதுகாப்பு

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரையில் எங்களது கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் (தே.மு.தி.க.) ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது பல்வேறு விமர்சனங்களை சொல்வார்கள். அதேசமயம், தேர்தலில் கூட்டணி என்று வரும்போது ஒருமித்த கருத்து எழும். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேருவதில் எந்தவித இழுபறியும் இல்லை.

நாட்டின் பாதுகாப்பு கருதியே பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அதன்படி முதலில் பா.ம.க.வும், அதைத்தொடர்ந்து பா.ஜனதாவும், தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேரும். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.

7 பேர் விடுதலை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களை தி.மு.க. ஆட்சியில் பரோலில் விட்டார்களா? ஆனால் அவர்களின் உடல்நலன் கருதி உறவினர்கள் கேட்டுக்கொண்டதால் அ.தி.மு.க. ஆட்சியில் தான் பரோலில் விடுவிக்கப்பட்டனர். 7 பேர் விடுதலைக்காக தி.மு.க. எதையும் செய்யவில்லை. முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்த காலத்தில், ஒருவரை மட்டும் விடுவிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இது யாருக்காவது தெரியுமா? ஆனால் அனைத்தும் எங்களுக்கு தெரியும். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் வேண்டும் என்றே மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்கள்.

தேர்தலுக்காக இதுபோன்ற நாடகம் ஆடுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் மீது பாசம் இருந்திருந்தால் தி.மு.க. ஆட்சியில் விடுதலை செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, அதை கவர்னரிடம் கொடுத்துள்ளோம். அவர் மத்திய அரசிடம் ஆலோசித்து உரிய முடிவை அறிவிப்பார்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story