சித்திரை திருவிழாவின் போது நாடாளுமன்ற தேர்தல்: மதுரை தொகுதி ஓட்டுப்பதிவை தள்ளிவைக்க நீதிபதிகளிடம் முறையீடு


சித்திரை திருவிழாவின் போது நாடாளுமன்ற தேர்தல்: மதுரை தொகுதி ஓட்டுப்பதிவை தள்ளிவைக்க நீதிபதிகளிடம் முறையீடு
x
தினத்தந்தி 12 March 2019 4:45 AM IST (Updated: 12 March 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

மதுரை தொகுதிக்கான வாக்குப்பதிவை தள்ளி வைக்கக்கோரி ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது.

மதுரை,

மதுரை சித்திரை திருவிழாவின் போது நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. எனவே மதுரை தொகுதிக்கான வாக்குப்பதிவை தள்ளி வைக்கக்கோரி ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது. இதை மனுவாக தாக்கல் செய்தால் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை சித்திரை திருவிழா

மதுரை ஐகோர்ட்டில் நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது வக்கீல் பார்த்தசாரதி ஆஜராகி, தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆனால் அந்த சமயத்தில் மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடக்கிறது. ஏப்ரல் 18-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டமும், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கின்றன.

தள்ளிவைக்க வேண்டும்

அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், பொதுமக்கள் ஓட்டுபோடுவதற்கு வருவது, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகும். மதுரையில் சித்திரை திருவிழா நடக்கும் இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் பட்சத்தில், அங்கு சென்று மக்கள் ஓட்டு போட முடியாத நிலையும் ஏற்படும்.

தேர்தல் பணிகளிலும் அதிகாரிகள், அலுவலர்கள் ஈடுபடுவதில் சிரமங்கள் ஏற்படும். எனவே மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார்.

மனுதாக்கல்

அதற்கு நீதிபதிகள், “உங்களது கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

கலெக்டரிடம் மனு

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி கமிஷனர் விசாகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்து கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் விளக்கி பேசினர். பின்னர் பேசிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒருமித்த குரலில் மதுரையில் மீனாட்சி அம்மன் தேரோட்டத்தன்று வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே தேர்தல் தேதியை வேறு நாளுக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று பேசினர். பின்னர் அவர்கள் இதுதொடர்பாக மனு ஒன்றையும் எழுதி, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கையெழுத்து போட்டு கலெக்டரிடம் வழங்கினர்.

கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் நடராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை குறித்த தகவலை தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் இருந்து கடிதம் வந்திருந்தது. இந்த கடிதத்திற்கு இந்து அறநிலையத் துறையிடம் இருந்து பதில் பெற்று, மதுரை மாவட்டத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தன்று, அதாவது ஏப்ரல் மாதம் 19-ந் தேதி உள்ளூர் விடுமுறை என்று தெரிவித்து இருந்தோம்.

ஓட்டுப்பதிவு நேரம்

இந்தநிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேரோட்டத்தன்று தேர்தல் நடைபெறுவதால் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கொடுத்த மனு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

தேரோட்டத்தன்று தேர்தல் நடைபெறுமா என்று கேட்டால், நான் பீகாரில் தேர்தல் பார்வையாளராக இருந்த போது திருவிழாவிற்காக ஓட்டுப்பதிவு நேரம் மாற்றி அமைக்கப்பட்டு தேர்தல் நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருவிழாவின் போது சட்ட விதிகளை பின்பற்றி தேர்தலை நடத்த முடியுமா? என்ற கேள்விக்கு, “எங்களை பொறுத்தவரை அறிவித்த தேதியில் தேர்தலை நடத்த வேண்டும்” என்று கலெக்டர் தெரிவித்தார்.

Next Story