வேனில் கொண்டு சென்ற ரூ.3 கோடி பறிமுதல்


வேனில் கொண்டு சென்ற ரூ.3 கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 6 April 2019 8:07 PM GMT (Updated: 6 April 2019 8:07 PM GMT)

கோவை அருகே வேனில் கொண்டு சென்ற ரூ.3¾ கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை, 

கோவை அருகே வேனில் கொண்டு சென்ற ரூ.3¾ கோடி பறிமுதல் செய்யப்பட்டது. நிற்காமல் சென்ற வேனை துரத்தி சென்று அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

ரூ.3¾ கோடி

கோவையை அடுத்த சூலூர்-திருச்சி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திருச்சி சாலையில் பல்லடம் நோக்கி வேகமாக சென்ற ஒரு தனியார் வேனை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை செய்தனர். ஆனால் அந்த வேன் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த பறக்கும் படை அதிகாரிகள், வேனை பின் தொடர்ந்து தங்களது வாகனத்தில் துரத்தி சென்றனர்.

சூலூரை அடுத்த காரணம்பேட்டை நான்கு வழி சந்திப்பில் அந்த வேனை பறக்கும் படையினர் மடக்கி தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வேனில் இருந்த இரும்பு பெட்டிகளுக்குள் கட்டுக் கட்டாக ரூ.3 கோடியே 80 லட்சம் இருந்தது. இதை தொடர்ந்து வேனில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பறிமுதல்

தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மில் நிரப்புவதற்காக பணம் கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

இதன் பின்னர் அந்த பணம் சூலூர் கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. .3¾ கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story