சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா? காங்கிரஸ் கண்டனம்


சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா? காங்கிரஸ் கண்டனம்
x
தினத்தந்தி 11 Dec 2019 11:03 PM GMT (Updated: 11 Dec 2019 11:03 PM GMT)

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா? குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சென்னை, 

பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பாரதியார் உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேசிய செயலாளர்களும், தமிழக பொறுப்பாளர்களுமான சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத், ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, துணைத் தலைவர் ஆர்.தாமோதரன், எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து சஞ்சய் தத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அறிவுரைப்படி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழகம் உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியல் சாசன சட்டத்தின் மீதான தாக்குதல் என்றும், இதற்கு ஆதரவு அளிப்பது நாட்டின் அடித்தளத்தையே சீர்குலைப்பதாகும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்து இருக்கிறார்.

இந்து ராஜ்யம்

இந்த சட்டத்திருத்தமானது மனித உரிமை விதிகளுக்கு எதிரானது. இது உலக அளவில் இந்தியா மீது தவறான கருத்தை உருவாக்கும். இந்தியா இந்து ராஜ்யம் என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையை பா.ஜனதா அரசு செயல்படுத்துகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், சுதந்திரத்துக்கு முன் ஜின்னா, சாவர்கர் கூறியது போன்ற இரு நாடு கோட்பாட்டு வெற்றியாக அமையும்.

இது அரசியல்சாசனத்தின் ஒற்றுமையை பிளவுபடுத்தும் மசோதாவாகும். மேலும், மதங்களின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைகளுக்கு எதிராக இது முஸ்லிம்களிடம் பாகுபாடு காட்டுகிறது. சில சமூகத்தினருக்கு குடியுரிமை சலுகை அளிக்கிறது. ஆனால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுகிறது. மேலும், இலங்கையில் இருந்து வரும் தமிழ் இந்துக்கள், மியான்மரில் இருந்து வரும் ரோஹிங்யர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்படுகிறது.

ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு கொள்ளையடித்ததோடு, தங்களை எதிர்ப்பவர்களை குற்றப்பத்திரிகை இல்லாமலே சிறையில் அடைத்தனர். அதே போன்றுதான், தற்போதைய பா.ஜனதா அரசு பெரும்பான்மையினரின் வாக்கு வங்கிக்காக பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறது. தங்களை எதிர்க்கும் ப.சிதம்பரம் விசாரணை செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டபோதிலும் இதுவரை அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

தற்போது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளன. உள்நாட்டு உற்பத்தி உண்மையில் 3.5 சதவீதம் அளவிற்கு குறைந்து உள்ளது. இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மை விகிதம் 8 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆனால், உலக அளவில் வேலை வாய்ப்பின்மை விகிதம் என்பது 4 சதவீதமாகவே உள்ளது.

திரும்பப்பெற வேண்டும்

மோடி அரசின் தோல்விகளான இது போன்ற விஷயங்களை மக்களிடம் இருந்து திசைதிருப்புவதற்காகவே பா.ஜனதா அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. எனவே குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், நேர்மைக்காகவும் காங்கிரஸ் கட்சி எந்தவித தியாகத்தை செய்யவும் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story