5 காவலர்களுக்கு கொரோனா உறுதி; சென்னை மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் மூடப்பட்டது
5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் மூடப்பட்டு உள்ளது.
சென்னை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில் உள்பட அனைத்து வகையான ரெயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் ரெயில்கள் பறக்கும் ரெயில் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இவற்றில் சென்னை மயிலாப்பூரை அடுத்த மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையத்தில், பணியாற்றி வந்த 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனையடுத்து அவர்கள் 5 பேரும் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் மூடப்பட்டது. தொடர்ந்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதார துறை விதிகளின்படி, 28 நாட்களுக்கு அந்த பகுதி வழியே ரெயில் சேவை ரத்து செய்யப்படும். இதனால் ஊரடங்கு தளர்வுக்கு பின்பு ரெயில் சேவை தொடங்கப்பட்டாலும், கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலான பகுதிகளில் 28 நாட்களுக்கு ரெயில் சேவை செயல்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story