10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்றும், மருத்துவ ரீதியாக இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு நடத்தலாம் என்றும் தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜூன் 1-ந் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பீதியும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் இந்த அவசர அறிவிப்பு, மாணவ-மாணவி மற்றும் அவர்தம் பெற்றோர் மனதில் மேலும் பதற்றத்தை உருவாக்கவே செய்யும்.
மக்களின் மனநிலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், திடீரென தன்னிச்சையாக இப்படி ஒரு முடிவை அரசு எடுத்துள்ளது. வாரந்தோறும் பிரதமரே அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடனும் கலந்தாலோசனை செய்து முடிவுகள் எடுக்கும் போது, இத்தேர்வு தேதிகளை யாரை கேட்டு தமிழக அரசு முடிவு செய்கிறது? ஆசிரியர்-பெற்றோர் சங்க பிரதிநிதிகளின் கருத்து கேட்டு, பரிசீலனை செய்யப்பட்டதா?.
மே 17-ந் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. ஊரடங்கு நீடிக்குமா இல்லையா என்பதை அரசு இன்னமும் இறுதி முடிவு செய்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தேர்வு தேதியை அறிவிக்க என்ன அவசரம், என்ன அவசியம்?.
சென்னையில் கொரோனா பாதிப்பு குறையாமல், பெருகி வருவதால், தமிழகத்தில் விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்தை மே 31-ந் தேதி வரை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமரிடம் தமிழக முதல்-அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். மே 31-ந் தேதி வரை ரெயில்கள் ஓடாது என்றால், போக்குவரத்து வசதிக்கு உத்தரவாதம் இன்றி, ஜூன் 1-ந் தேதி காலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு எப்படி வருவார்கள்? மாணவர்கள் எத்தனை பேர் வெளியூர்களில் இருக்கிறார்கள் என தெரியாது. இந்நிலையில் எதற்காக இத்தகைய குழப்பமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு...
கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதிப்படுத்திய பிறகு, தேர்வு நடத்துவதே சரியானது; முறையானது. தேவையான கால இடைவெளி கொடுத்து, மாணவர்களையும், பெற்றோரையும், ஆசிரியர்களையும் மனரீதியாக தயார் செய்த பிறகு, தேர்வு தேதியை அறிவிப்பதே சரியாக இருக்கும். நெருக்கடி மிகுந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தன் பங்குக்கு குழப்பத்தை அதிகப் படுத்துவது நியாயமல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜூன் மாதம் துவக்கத்திலும் கொரோனா நோய்த்தொற்று மேலும் அதிகரிக்கும் என பரவலான கருத்து நிலவுகிறது. இச்சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான போக்குவரத்து ஏற்பாடுகள் என்ன என்பதும் தெரியாத சூழ்நிலையில் ஜூன் மாதம் 1-ந்தேதி தேர்வுகள் என்ற அறிவிப்பு பொருத்தமானதாக இருக்காது. இதை கவனத்தில் கொண்டு குறைந்தபட்சம் இரு வாரங்களாவது வகுப்புகளை நடத்திவிட்டு அதன் பிறகு பொதுத்தேர்வுகளை நடத்துவதே சரியாக இருக்கும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
மேலும் தலைவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கையில் வருமாறு:-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-
ஊரடங்கு நிலை நீங்கி, இயல்பு வாழ்க்கை திரும்பியதும், ஒருமாத காலம் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, தேர்வுக்கு செல்வதுதான் பொருத்தமாக இருக்கும். எனவே அவசரப்பட்டு தற்போது அறிவித்துள்ள தேர்வு தேதிகளை மறுபரிசீலனை செய்து, மாணவர்கள் தேர்வுஎழுதும் உகந்த சூழலில் தேர்வு நடத்த தேர்வு தேதிகளை மாற்றி அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் இள மாறன்:-
நாளுக்குநாள் கொரோனா வைரஸ் விசுவரூபம் எடுத்துவருகிறது. இந்த நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை ரத்துச்செய்ய இயலாதபட்சத்தில், கொரோனா முடிவுக்கு வந்த பிறகே தேர்வு நடத்தவேண்டும். அதுவும் மாணவர்களுக்கு நினைவூட்டல், ஆயத்த பயிற்சிக்கு 2 வாரம் பள்ளி வைத்த பிறகே தேர்வு வைத்தால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன்:-
இதுபோன்று அவசர அவசரமாக தேர்வுகளை நடத்துவதால் பல லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டு மீண்டும் ஒருமுறை பொதுத்தேர்வு நடத்தும் அவலநிலை ஏற்படும். தற்போது உள்ள சூழலில் மாணவர்களின் உயிரைவிட தேர்வு ஒன்றும் முக்கியமானதல்ல. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அட்டவணையை உடனடியாக ரத்துசெய்யவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story