தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் 14 நிறுவனங்கள்: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் 14 நிறுவனங்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன. இதன் மூலம் புதிதாக 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சென்னை,
உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதிகம் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் வெளியேறிக் கொண்டிருக் கின்றன. அதுபோன்ற தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழுக்களை அமைத்து அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த குழுவில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் க.சண்முகம், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் ஒவ்வொரு புதிய தொழில் நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு, தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 5 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் தொழில் தொடங்க 42 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.30 ஆயிரத்து 664 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 67 ஆயிரத்து 612 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், பல்வேறு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கும் வகையில் புதிய தொழில் கொள்கையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க மேலும் 14 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்த நிறுவனங்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறார்.
ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி நிறுவனம், அப்பல்லோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி, ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனம், டி.பி.ஐ. கார்போன் நிறுவனம், மந்த்ரா டேட்டா சென்டர் உள்பட 14 தொழில் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன.
இதில், பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்கப்படுகிறது. ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரிலும், அப்பல்லோ டயர்ஸ் ஒடகரத்திலும் அமைய இருக்கிறது. மற்ற நிறுவனங்கள் சென்னையை ஒட்டிய திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் அமைய உள்ளன. இந்த 14 நிறுவனங்களும் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதால், இதன் மூலம் 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
Related Tags :
Next Story