இட ஒதுக்கீடு, மாநில நிதி உரிமைக்கு விரோதமாக மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதுவதா? சூரப்பாவுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்

இட ஒதுக்கீடு, மாநில நிதி உரிமைக்கு விரோதமாக மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதுவதா? என்று சூரப்பாவுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘4 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் ரூ.1,500 கோடி நிதி திரட்டிக்கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்கவேண்டும்’ என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள், தமிழக உயர்கல்வி வளர்ச்சியில், குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில், அக்கறை கொண்டிருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியை தரும்.
அ.தி.மு.க. அரசின் சார்பில் இதுகுறித்து ஆராய்ந்து கொள்கை முடிவு எடுக்க அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரை இன்னும் வெளிவராத சூழலில் ஒரு துணைவேந்தர் எப்படித் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்? முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரகசியமாகக் கொடுத்த ‘அனுமதி’ காரணமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ‘உயர் சிறப்பு அந்தஸ்து’ என்று கூறிவிட்டு மாநில அரசும் நிதியளிக்கவேண்டும் என்று கூறி வருகிறது மத்திய அரசு. 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதிப்பும் வராது என்று எவ்வித உத்தரவாதத்தையும் அதிகாரபூர்வமாக அளிக்க மத்திய அரசு இன்று வரை மறுத்து வருகிறது. மாநில நிதி நிலைமை மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடுக் கொள்கை போன்றவற்றில் முடிவு எடுக்கவும், மாநில அரசின் நிதி தேவையில்லை, பல்கலைக்கழகமே அந்த நிதியைத் திரட்டிக் கொள்ளும் என்றும் மிக முக்கியமான முடிவுகளை எடுத்து, துணைவேந்தர் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கடிதம் எழுதுகிறார் என்றால் அவர் என்ன மாநிலத்திற்கு இன்னொரு முதல் -அமைச்சர்போல் செயல்படுகிறாரா?
துணை வேந்தராக இருக்கும் சூரப்பாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கும் நேரத்தில் தமிழகத்திற்கும், மாணவர்களுக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக, பேரறிஞர் அண்ணாவின் புகழ்ப் பெயருக்கும் இப்படியொரு துரோகத்தைச் செய்ய அவருக்கு எப்படி தைரியம் வந்தது? தமிழகத்தில் நிலவும் இடஒதுக்கீட்டின் ஆணிவேரில் வெந்நீரை ஊற்றும் செயலில் ஒரு துணைவேந்தர் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. துணைவேந்தரின் அதிகார அத்துமீறலுக்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியை காவி மயமாக்க அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம்தான் கிடைத்ததா? துணைவேந்தர் சூரப்பா எழுதிய கடிதத்தை ஏதோ அது தனிப்பட்ட ஒருவரின் முயற்சியாக நான் கருதவில்லை. துணைவேந்தர், முதல்-அமைச்சர், தமிழக கவர்னர் ஆகியோர் கூட்டணியாக, எப்படியாவது அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர்கல்வியை, காவி மயமாக்கிட செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி நடவடிக்கையாகவே எண்ணிட வேண்டியதிருக்கிறது. குறிப்பாக முதல்-அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் எல்லாம் ‘நீட் சட்டம்’ குறித்து பேசப்போகிறோம் என்று கூறிவிட்டு ராஜ்பவனுக்குச் சென்று, கவர்னரை சந்தித்ததில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரின் இந்த கடிதத்திற்கும் அனுமதி கொடுக்கப்பட்டதா என்பதை எடப்பாடி பழனிசாமி உடனடியாகத் தெளிவுபடுத்தவேண்டும்.
அ.தி.மு.க. அரசின் தீமை பயக்கும் உள்நோக்கத்தை அறிந்துதான் அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் முடிவினை சட்டமன்றத்தில் தி.மு.க. எதிர்த்தது.
ஆகவே, இந்த கடிதம் எழுதப்பட்டிருப்பதில் முதல்-அமைச்சருக்கு உடந்தை இல்லை எனில், இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், மாநில நிதிஉரிமைக்கு விரோதமாகவும், மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக, தன்னிச்சையாக கடிதம் எழுதியுள்ள துணைவேந்தர் சூரப்பாவை உடனே ‘டிஸ்மிஸ்’ செய்யவேண்டும் என்று வேந்தராக இருக்கும் கவர்னருக்கு, முதல்-அமைச்சர் பரிந்துரை செய்ய வேண்டும்.
மேலும், ‘துணைவேந்தர் எழுதியுள்ள கடிதத்திற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உரிய அதிகாரபூர்வமான உத்தரவாதம் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றும் பிரதமருக்கு உடனடியாக கடிதம் எழுதி தனது எதிர்ப்பை முதல்-அமைச்சர் வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும்.
மேலும் ‘உயர்சிறப்பு அந்தஸ்து’க்கு வழிவிடும் துணைவேந்தர் கடிதத்திற்குத் துணைபோகும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் சட்ட முன்வடிவைத் தமிழக கவர்னர் நிராகரித்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் காவு கொடுக்க முயற்சிக்கும் துணைவேந்தர் கடித விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு கால தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தி.மு.க.வின் இளைஞரணி, மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story