ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள்: என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் - கமல்ஹாசன்


ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள்: என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 15 Oct 2020 10:55 AM IST (Updated: 15 Oct 2020 10:55 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி, என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தார். வாழ்நாள் முழுவதும் மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய இவரின் பிறந்த நாளை ஐ.நா. சபை 2010ல் உலக மாணவர்கள் தினமாக அறிவித்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த இவர் 1980ஆம் ஆண்டு SLV- III ராக்கெட்டை பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்.

இவர் பத்ம பூஷண்(1981), பத்ம விபூஷண்(1990), பாரத ரத்னா (1997) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் ஆகிய புத்தகங்கள் புகழ் பெற்றவைகள்.

இவர் 1999ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். 2002ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக 2007ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.

இந்தநிலையில் மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் வழிகாட்டி என போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி என பதிவிட்டுள்ளார்.

Next Story