தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து நல்ல மழைபெய்து வருகிறது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த வாரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக வளிமண்டலத்தில் நிலவிய மேலடுக்கு சுழற்சியால் நேற்று தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது.
இந்தநிலையில் தமிழக கடலோர பகுதிகளில் ஏற்கனவே நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று(வியாழக்கிழமை) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், ஏனைய உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுதவிர நாளை(வெள்ளிக்கிழமை) இதே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், தீபாவளி தினமான நாளை மறுநாளும்(14-ந்தேதி) கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Related Tags :
Next Story