தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது


தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது
x
தினத்தந்தி 1 Dec 2020 12:25 AM GMT (Updated: 1 Dec 2020 12:57 AM GMT)

தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என்றும், இது நாளை இலங்கையை கடந்து குமரி கடலில் நிலை கொள்ளும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை, 

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று(நேற்று) காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இது மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 1-ந்தேதி(இன்று) காலை புயலாகவும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2-ந்தேதி(நாளை) மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் நிலை கொள்ளும். இது குமரி கடல் பகுதியில் 2 நாட்கள் நிற்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

இதன்காரணமாக 1-ந்தேதி (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். 2-ந்தேதி(நாளை) தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். இந்த கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வரும் 3-ந்தேதி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை 2-ந்தேதி மிதமான மழை இருக்கும். திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் கனமழை இருக்கும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். மீனவர்கள் வரும் 3-ந்தேதி வரை தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story