தண்ணீர் தொட்டியில் தேச பற்று - ஊராட்சி மன்ற தலைவர் செயலுக்கு குவியும் பாராட்டு.

சிவகங்கை அருகே தண்ணீர் தொட்டியில் தேசியக்கொடியின் மூவர்ணத்தை பூசி தேச ஒற்றுமையை ஏற்படுத்தும் ஊராட்சி மன்ற தலைவர் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், கே. நெடுவயல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்தில் இருந்து புதிய நீர்த்தேக்க தொட்டிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊர் மக்களுக்கு தேசப்பற்றையும் ஒற்றுமையையும் உருவாக்கும் விதமாக தேசிய கொடியில் உள்ள மூவர்ணத்தை பூசும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது பலரது கவனத்தை பெற்றுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
பலதரப்பட்ட சமுதாய மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருதல் என்பதோடு மட்டும் நின்று விடாமல் அவர்களுக்கு மத்தியில் நாட்டுப்பற்றையும், தேச ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக நம் நாட்டின் தேசிய கொடியின் வர்ணத்தை இந்த நீர்த்தேக்க தொட்டியில் ஏற்படுத்தி உள்ளேன். இவ்வாறு கூறியதோடு மட்டுமல்லாமல் இன்னும் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் இத்தகைய வர்ணங்களைப் பூசி கிராமமக்களிடையே மதசார்பற்ற சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும் என்று கூறினார்.
மாவட்டத்திலேயே எத்தனையோ ஊராட்சிகள் இருந்தாலும், ஒரு முன்மாதிரி ஊராட்சியாக நாட்டுப்பற்றை பறைசாற்றும் வகையில் ஊராட்சி மன்ற தலைவரின் இத்தகைய முயற்சி வியக்கத்தக்கது என சமூக ஆர்வலர்களும், அறிஞர் பெருமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story